பாமரன் என்போன் யார்?

இசை பாமரனையும் சென்றடைய வேண்டுமா? என்று இசை தெரியாதவர்களைப்பற்றி ஏளனமாய் எழுதியுள்ளார்.
(இதில் நானும் அடக்கம்)

அவர் பாமரன் என்ற பதத்தை என்ன அர்த்தத்திலே எழுதியுள்ளார் என எனக்கு முழுமையாக விளங்கவில்லை.

பாமரன் என்றால் குறிப்பிட்ட ஒன்றைப் பற்றி அறியாதவன் என்ற பொருளிலே எடுத்துக்கொண்டோமானால்,

தமிழைப்பொறுத்தவரையில் திரு. மன்மோகன் சிங் பாமரர். பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் நான் ஒரு பாமரள்.இதில் பாமரத்தன்மை என்பதை சமூகம் அல்லது அவர்களின் வாழ்க்கைத்தரத்தை வைத்தே நாம் முடிவுகட்டிவிட முடியாதல்லவா?

நான் புரிந்துகொண்டவரையில் அவர் 3,4ம் சமுகங்களையும், 54க்குப் பிறகு இந்துமதத்தில் நைசாக? சேர்த்துக்கொண்ட பூர்வகுடிகளையும் மனதில் வைத்தே இவ்வாறு சொல்லியுள்ளார்.

இசை ஏதோ அவரின் குடும்பச்சொத்து மாதிரியும், அவரின் நிலையில் இருந்து இறங்கி வந்து சொல்வது "உவ்வே" உணர்ச்சியைக் கொடுப்பது மாதிரியும் எழுதியுள்ளார்.

கல்வி/ கலை போன்றவைகளைப் பொருத்தவரையில் நாம் தொழிலை எடுத்துக்கொள்ளமுடியுமே தவிர கலையை அல்ல.

ஐயன்மீர்களுக்கு!

நாம் வந்தேறிகளா இல்லையா என்பதை, இங்கே நாம் விவாதம் செய்யவேண்டாம். நாம் ஒரு இடத்தில், நிரந்தரமாகத் தங்கியாகிவிட்டது.

பிறப்பாலேயே குடியுரிமை/வாக்குரிமை கிடைத்தாகிவிட்டது. பிறகும் நான் குறுகிய வட்டத்திற்குள் தான் வாழ்வேன், ஊருடன் ஒத்துவாழமாட்டேன் என்று சொன்னால் எப்படி?

இன்னும் கேட்டால் கர்நாடக சங்கீதம் நம்மிடம் எத்தனை ஆண்டுகளாய் உள்ளது?

ஒரு 300 ஆண்டுகள்? அதற்கு முன்பு?

இப்படி உயரிய கலைகளை நமக்குள்ளேயே வைத்துப் பாதுகாத்தோமானால், இவைகளுக்கும் நம் சமஸ்கிருத மொழிக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் அபாயம் இருக்கின்றது.
இத்தகைய செயல்களால் எத்தனை இளையராஜாவை நாம் இழந்தோமோ?

தனி அடையாளங்களை/பண்புகளை வைத்துக்கொண்டு ஒரு மூடிய குழுவிலே இருந்தால், அந்த அடையாளங்கள் இல்லாத மற்றவர்கள் காரணமில்லாமலேயே விரோதியாய் பார்ப்பது, குழு உளவியல் மனப்பாண்மையாகும்.

ஆகவே சற்றே சிந்தித்து, தகுந்த நடவடிக்கைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


ஐயன்மீர் அல்லாத பாமரர்களுக்கு...

இரை தேடவே அல்லல் பட்டு போராடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு
இறை சார்ந்த கலைகளைப் புரிந்துகொள்ளவும் வேண்டுமோ?

கமலகாசன் படத்தில் சொன்னதைப்போல் பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவன் காதில் இசை எப்படி நுழையும்.

3 வேலை உணவைப்பற்றி கவலைப்படாதவர்களிடம் மட்டுமே கலைமகள் இருப்பாள்.

சரி, தற்போது உள்ள வாய்ப்புகளால் நன்றாக சம்பாதிக்க ஆரம்பித்து உள்ளவர்கள், எத்தகைய முயற்சியும் செய்யாமல்,

அது எனக்குப் புரியவேண்டும் என்று சொன்னால் எப்படி?


அதற்கு சிறிதளவேனும் முயற்சி செய்யவேண்டுமல்லவா?
நீங்கள் கேட்டு, உங்களுக்கு கற்றுக்கொடுக்க மாட்டேன் என்று யாராவது சொன்னார்களா?

ஆனாலும் உங்களின் பூர்வீகம், வரலாறு போன்றவற்றைப் பார்க்கும் போது நகைப்பதா, அழுவதா எனத் தெரியவில்லை.

ஒரு கலையில் விவரங்கள், ஒரு சாரரிடம் அல்லது ஒரு குறிப்பிட்ட மொழியின் வார்த்தைகள் அக்கலையில் அதிகமாகப் புழங்கினால் அது அவருக்கே சொந்தமாகி விடுமோ?

இசை சமஸ்கிருதத்தின் உரிமையென்றால் பின் ஏன் தூய்மையான பிரதேசங்களான பிரம்மவர்த்தம், பிரம்மவர்ஷி, மத்தியதேசம் மற்றும் ஆர்யவர்த்தம் ஆகிய இடங்களில் பரவாமல் மிலேச்சர்கள் வாழும் இந்தப் பகுதியுடன் அடங்கிவிட்டது?


இப்படிப் பரவாத மற்ற கலைகளையும் இவ்வாறே கொள்க..

ஒருவேளை அமெரிக்கர்களுக்கு இட்லி, தோசை ஆகியவை பிடித்துப்போய், அவர்கள் செய்முறையை அவர்களின் மொழியிலேயே எழுதிக்கொண்ட பிறகு,

அத்தியாவசிய உணவுப் பொருட்களான கோதுமைக்கு அதிக மானியமும், அரிசிக்கு மிகக் குறைந்த மானியமும் அளித்து,

நம்மை இரண்டாந்தர குடிமக்களாய் நடத்துவதின் காரணமாக,

நாமும் கோதுமை உணவு வகைகளுக்கு மாறிவிட்ட பிறகு,

மேலை நாட்டினரைப் பார்த்து, ஆகா! அவர்களின் உணவுச் சுவையே சுவை என்று கைதட்டி மகிழ்ந்தாலும் மகிழ்வோம்.


பாட்டு, கூத்து, விகடம் செய்தலைத் தவிர்க்கவேண்டும் என்ற அறிவுரைகளையும் மீறி,

தமிழரின் கலைகளை,
பாண்டிய மன்னன், தில்லி மாலிக்காபூரிடம் தலையை அடகு வைத்த அன்று முதல், இன்னும் அடிமையாய் இருக்கும்

இன்று வரை,
பத்திரமாய் காப்பாற்றி வருகின்றனர்.

ஆகவே தயவு செய்து, கர்நாடக இசைக்கலைஞர்களை வர்ண துவேஷம் பாராமல், ஆதரியுங்கள்.தாராளமாக குரு தட்சினை கொடுத்து கலைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

வீணே மற்றவரை குறை சொல்வதை நான் வண்மையாகக் கண்டிக்கிறேன்.

நன்றி,
பூங்குழலி.

1 பின்னூட்டங்கள்:

பூங்குழலி said...

மிகச்சரி தேசி ரோபோ..

வாழைப்பழ சோம்பேரிகளாய் இருந்துகொண்டு, நாம் எதையும் அடைந்துவிடமுடியாது.

நன்றி,
பூங்குழலி