மதுமிதா அவர்களின் ஆய்விற்காக...

வலைப்பதிவர் பெயர்: பூங்குழலி

வலைப்பூ பெயர் : குழப்பம்

உரல் : http://kuzhappam.blogspot.com/

ஊர்: புதுச்சேரி மற்றும் சென்னை.

நாடு: இந்தியக் குடியரசு

வலைப்பூ அறிமுகம் செய்தவர்:
தான் தோன்றி தனமாய் வலைமேய்ந்து கொண்டிருந்தபோது, எதேச்சையாய் கண்ணில்பட்டது.... நம்மிடையே பெரிய அளவிலே பேசப்பட்ட கற்பு விவகாரம், அதற்காக தனி பதிவு பதியப்போய், தமிழ்மணம் அறிமுகமாகி வெகுவிரைவிலே தமிழ்மண விவாதங்களைக் கண்டவுடன், தற்போதைய முக்கியத்தேவை எதுவெனக் குழம்பி குவியம் மாறி, அலையில் அடித்துச் செல்லப்பட்டு....ம்ம்...
வலைப்பூ அமைப்பு, அதன் தொழில்நுட்பம் மற்றும் நல் அறிமுகம் கொடுத்தவர்கள் என்று பார்த்தால் முத்து(தமிழினி), குமரன், இராகவன் மற்றும் முத்துக்குமரன் ஆகியோரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :

நவம்பர் திங்கள் 2005

இது எத்தனையாவது பதிவு: 21

இப்பதிவின் உரல்: http://kuzhappam.blogspot.com/2006/05/blog-post.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
புதிதாய் ஒன்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானி, வரம் வாங்கிய பூசாரி, ஒலிவாங்கி (அதாங்க மைக்) கிடைத்த அரசியல்வாதி ஆகியோர்போல் தனக்கென ஒரு கருத்து ஏற்பட்டு அதைக்கேட்க ஆளில்லாதபோழ்து வசமாய்க் கிடைத்தது வலைப்பூ.
எத்தனை பேர் விசனப்பட்டார்களோ...

சந்தித்த அனுபவங்கள்:
அடு(ட)க்குமுறை நிறைந்த நமது சமுதாயத்தில், இவளென்ன சொல்வது, நாமென்ன கேட்பது என்றல்லாமல் மதித்து பதிலாற்றக்கூடியவர்கள் உள்ளாரென கண்டறிந்தது, இது பிஞ்சிலே பழுத்தது இல்லை இல்லை வெம்பியது என்ற நற்பெயர் பெற்றது..

பெற்ற நண்பர்கள்:
நிறைய பேர், வலைப்பூ பதியும் அனைவரையுமே நான் தோழர்/தோழிகளாகவே கருதுகிறேன், இது நழுவுவதற்காக சொல்லப்பட்ட கருத்தல்ல....

கற்றவை:
தன் கட்டுப்பாடில்லாத சுதந்திரம், அடிமைத்தனத்தை விட மோசமானது, நடைமுறையில் உணர்ந்தது...
ஒரு மூளை சிந்தித்து எழுதுவதை, படிக்கும் மூளை எவ்விதமெல்லாம் வெவ்வேறு கோணங்களில் சிந்திக்கமுடியும் என்பது பின்னூட்டகளின் மூலம் அறிந்தது...
மனமாற்றத்திற்கும், அழித்தொழிப்பதற்கும் உள்ள வேறுபாடு...


எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:
politically correct எனப்படுகிற வகையில் எந்தக்கருத்தை எழுதினாலும் அது ஏற்றுக்கொள்ளப்படும், சற்றே தவறினால் தனிமனித தாக்குதல் நிச்சயம்.

இனி செய்ய நினைப்பவை:
என் கடன் ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டிருப்பதே....

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
வீட்டில் கடைகுட்டி
படிப்ப(த்த)து : இளங்கலை அறிவியல் (வேதியியல் துறை).
மதுரை தமிழ்சங்கத்தின் தேர்வில் பள்ளியில் முதல் ஆளாய் வரப்போய், தமிழார்வமும் தொற்றிக்கொண்டது.
நாளையென்று தள்ளிப்போடும் சோம்பேரி..
இலட்சியக் கனவுகளின் தொழிற்சாலை


இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
எந்த பிரச்சினைக்கும் தீர்வுகள் கறுப்பு அல்லது வெள்ளை என்ற விளிம்பு நிலையில் தேடும் நிலையே பெரும்பாலான இடங்களில் நிலவுகிறது. சாம்பல் நிற யானை பற்றிய விவாதங்கள் நிறைய வருவது தமிழ்மணத்தில் அதிகரித்துள்ளது. அடுத்தவர் தன்மானத்தை பாதிக்காத வகையில் விவாதங்கள் செய்ய முயற்சி செய்கிறேன்.

அனைவரின் ஆதரவைத் தேடி
பூங்குழலி.