வெந்நீர் வைப்பது எப்படி?

நான் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் எப்படி...

பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.
இடம்போட்டு வைக்கவே இப்பதிவு..
கையொப்பம் போடமுடியாத எந்தக்கருத்தையும் எழுதக்கூடாதாமே...
வெந்நீர் வைக்க கற்றுக்கொண்டும், கையொப்பத்தினை வருடி எடுத்துக்கொண்டும் வருவேன்...

நன்றி..

நான் இந்து அல்ல!..

அன்பர்களுக்கு வணக்கம்.

கடந்த சில பதிவுகளைப்பார்த்துவிட்டு, பெரும்பான்மையான
அன்பர்கள் என்னைப்பற்றி தவறான் தகவல்களைக்
கொண்டிருக்கின்றனர் என் அறிய வருகிறேன்.

நான் சிறுவயதிலிருந்தே, என் பார்வையில், விடாது,
சந்தித்து வரும் மன உளைச்சல்களுக்கு ஒரு வடிகாலாகவும்,
தன்னிலை விளக்கமாகவும் அமையும் என நம்புகிறேன்.

காரிரு ளுள்ளக் கயவரன்ன மாந்தர்
மாரியை தாயை மழையை - பாரினில்
ஆரியப் பாவையாம் ரேணுகா தன்முகம்
மாறியென்றனர் எதுகை கெடுத்து.....



இருட்டரையில்
உள்ளதையா உலகம்
எனையும்
இந்து என்பவர்
இருக்கின்றாரே!

மாய்ந்து மாய்ந்து,
ஆயிரம்பேர் அரற்றினாலும்
பொய்யுரைகளை புகுத்தினாலும்
அல்லன அகற்றி
நல்லன நிலைநாட்ட
உண்மையை உரத்துச்சொல்ல
வேண்டியிருக்கிறது.

இன்றுவரை,
"நீ இந்துதானே?" என
வினவியவரிடமெலாம்
"இல்லை" என்றே
பதிலிருத்திருக்கிறேன்.
இனிமேலும் அப்படியே...

எனை கட்டிவைத்து
அடித்தாலும்
எட்டி உதைத்தாலும்,
கண்ணைக் கட்டி
கழுவிலேற்றினாலும்
எனது நிலைப்பாடு
"நான் இந்து அல்ல" என்பதே...

ஆம், இந்து எனது
சித்தி மகள்....
கல்லூரியில் பயில்கிறாள்....

சான்றோரே... சிந்தியுங்கள்...
படித்தோரே எனது
பதைக்கும் மனதை
புரிந்துகொள்ளுங்கள்.


கேளுங்கள் என் கதையை...
என்னதான் நான் வயதில்
மூத்தவளாயினும்...
அவளுக்கும்,
அவள் குடும்பத்திற்குமுள்ள
"பவிசு" காரணமாக
பெரும்பாலான நேரங்களில்
அவளைக்கொண்டே நான்
அறியப்பட்டிருக்கிறேன்.

சற்றே உருவ ஒற்றுமை
இருக்கிறது
என்பதற்காக
எனது தனித்தன்மையை
இழக்கவேண்டுமா என்ன?



உங்களின் நிலைப்பாட்டை, உங்களின் பதிவிலோ அல்லது
இந்த பதிவிலோ தெரியப்படுத்தலாம்.

நன்றி..

திராவிடர்களும் ஆரியர்களே!...

என்ன தலைப்பைப் பார்த்தவுடன் ஆச்சரியமாய் இருக்கிறதா?
எனக்குக் கூட இத்தகவலை கண்டவுடன் மிகவும் மலைப்பாய் இருந்தது.


இந்நாள் வரை வலைப்பதிவர்களின் உண்மைத்தேடல் மூலம் நான் அறிந்திருந்தவை....
* - திராவிடம் என்பதே பொய், ஆனால் ஆரியம் என்பது இருந்தது
*- திராவிடம் என்பதே திராவிட(?) மொழிகளின் சொல் அல்ல..
*- இன்னும் கேட்டால் மிலேச்சர்கள் என்று ஒன்றும் கிடையாது. வடமொழியைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற விதியால் பாதிக்கப்பட்ட எவனோ ஒருவன் செய்த இடைசெருகல்தான் மிலேச்சர்கள், அசுரர்,மிலேச்சபாஷை போன்ற சொற்கள்.

அனால் இந்த பொழிப்புரையாசிரியரின் விளக்கத்தைக் கண்டவுடன் ஆரியர்கள் என்போர் யார் என்ற சந்தேகம் தீர்ந்தது.


கீதையின் முதல் அத்தியாயமான அர்ஜுன விஷாத யோகத்தில் வில்லவனின் மனத்தடுமாற்றத்தையும், அவனது போலி வேதாந்தத்தையும் பற்றி விவரிக்கப்படுகிறது.

அதுவரை வாளாவிருந்த பகவான், இரண்டாம் அத்தியாயமான சாங்கிய யோகத்தில், இரண்டாம் பாடலாக வில்லவனை பார்த்து சொல்கிறார்.

ஸ்ரீபகவானுவாச...குதஸ்வா கச்மலமிதம் விஷமே
ஸ்முபஸ்திகம் அநார்யஜூஷ்டம ஸ்வர்க்யம கீர்திகரமர்ஜூன

அதாவது,

அர்ஜுன - அர்ஜூனா...
விஷமே- நெருக்கடியில்
குத- எங்கிருந்து
இதம்- இந்த
அநார்ய ஜூஷ்டம் - ஆரியனுக்கு அடாதது
அஸ்வர்க்யம்- சுவர்கத்திற்கு தடையாவது
அகீர்த்திகரம் -புகழைப் போக்குவது
கச்மலம்- மோகம்
(பொறாமை - இதுவும் பாடம், சில புத்தகங்களில் இவ்வார்த்தைக்கு பொறாமை என பொருள் கூறப்பட்டுள்ளது,
இது இடத்திற்கு தகுந்தவாறு மாறுமா எனத் தெரியவில்ல,
அறிந்தோர் தெரிவிக்கவும்..)
த்வா -உன்னிடத்து
ஸமுபஸ்திகம் - அடைந்தது?


ஸ்ரீபகவான் சொன்னது..

அர்ஜூனா, ஆரியனுக்கு அடாததும், சுவர்க்கத்தைத் தடுப்பதும், புகழைப்போக்குவதுமான
இவ்வளவுச் சோர்வு இந்நெருக்கடியில் எங்கிருந்து
உன்னை வந்தடைந்தது?


என்று கேள்வி எழுப்புகிறார்..


(நடுநடுவே எனக்கு தோன்றிய சந்தேகங்களை தனித்து காட்டியிருக்கிறேன்.)

பகவான் அனைத்தும் அறிந்தவர்,
ஆனால் இத்தைய கேள்வியை ஏன் அறியாத மானுடத்தன்மை
கொண்ட வில்லவனை பார்த்து கேட்டார் எனத்
தெரியவில்லை...ஒருக்கால் அறிவினாவாக இருக்கக்கூடும். :))


கேள்வியை விட்டுத்தள்ளுங்கள்...

நம் விவாதப் பொருளுக்குத் தேவைப்படும் அநார்ய ஜூஷ்டம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.

இச்சொல்லுக்கு பொழிப்புரையாசிரியர் கூறும் விளக்கத்தைக் காண்போம்.


ஆரியன் என்னும் பதம் நம் சாத்திரங்களில் வந்தமைவது
ஒரு தேசம் அல்லது ஒரு ஜாதிக்கு உரியவனைக் குறிப்பதற்கன்று.
பண்பட்ட மனதும் சிறந்த வாழ்க்கை முறையும்,
எவனிடத்துளதோ அவன் ஆரியன்.

(போட்டாரையா ஒரு போடு)

இது போன்று துரை, gentleman, அந்தணன், சாஹிப் முதலிய (முதலியார் அல்ல) சொற்கள் மேன்மக்களது பண்பைக் குறிப்பனவாம்.
தவம் புரிந்து (பாயசம் பெற்று?) பெறும் பிள்ளைகள்
ஆரியர் ஆகின்றனர் என்பதும்,(பிறந்தாலே போதுமா?, பண்பட்ட மனது
தேவையில்லையா?
) காம வசப்பட்டவர் பெற்ற பிள்ளைகள் ஆரியர் ஆவதில்லை
என்பதும் மனுஸ்மிருதியின் கோட்பாடாகும்.

மக்கள் அனைவரையும் ஆரியன் ஆக்குவது வேதாந்ததின்
நோக்கமாகும். (இது இன/மத மாற்றம்/அழிக்கப்படும்
பன்முகத்தண்மை கீழ்
வருமா?)

மேன்மகனாகிய வில்லவன் கீழ்மகன் போன்று
நடந்துகொள்வதை பகவான் நிராகரிக்கிறார்.(வெட்டு குத்து, குருதி
என்று போரிட்டு உறவினரை ஒழிப்பதுதான் மேன்மக்களின் பண்பு போலும்
)

நெருக்கடியில் மனக்கலக்கமடைபவன் ஆரியன் இல்லை.அத்தகையவனுக்கு இவ்வுலகும்
இல்லை, அவ்வுலகும் இல்லை.



என்பதாக கருத்து சொல்கிறார்.


அன்பர்களே....

திராவிடர்கள் பண்பட்ட வாழ்க்கை வாழ்பவர்கள் என்றே கருதுகிறேன்.

ஆகவே அவர்களும் ஆரியரே..
ஆரியரின் மதம் இந்து மதம் (இதில் சாஹிப்களும் அடக்கம்).
இந்துமதமே கீழ்மக்களை நல்வழிப்படுத்தி ஆரியராக்குகிறது.
இக்கருத்துகள் நாம் அனைவரும் இந்துவே பதிவுகளுக்கு
மேலும் வலு சேர்ப்பது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.


இது தொடர்பான முதல் இரண்டு பதிவுகளைக்காண...


குறிப்பு:

என்னதான் இப்பதிவு நாம் அனைவரும் இந்துவே என்ற
கருத்திற்கு பொருந்த்தமாய் இருந்தாலும்,"நாம் அனைவரும் இந்துவே"
என்ற தலைப்பு வைக்கமுடியாத அளவுக்கு சில இடைஞ்சல்கள் நேர்ந்துள்ளன.

அதுபற்றி எதிர்வரும் பதிவில் சொல்வேன்...
நன்றி.