அகப்பட்டேன் கிடந்துழல அகப்பட்டேன்...

தினம் ஒரு பதிவு போடாவிட்டால் கைகள் நடுங்குதல், பின்னூட்டங்களை படிக்க பயப்படுதல்,காலை எழுந்ததும் தமிழ்மணத்தில் முழித்தல், அரைத்தூக்கத்தில் பின்னூட்டங்களை மாற்றியிடல், பதிவிட்டு 1 மணி நேரமாகியும் பின்னூட்டம் வராமல் திகிலடைதல், ஆபீஸ் கணினியில் Alt+Tab ம், வீட்டுக்கணினியில் F5 பட்டன்களும் தேய்ந்திருத்தல், விளக்கப்பதிவென வெளங்காப்பதிவிடல், IP அட்ரசை அடிவரை தோண்டுதல், பார்க்குமிடமெல்லாம் +/- தேடுதல் போன்ற அனைத்து வியாதிகளும், மேலும் பதிவுகளைப் படிக்கும்போதே ஏற்படும் மடக்கிட்டானோ என்ற வயிறு கலக்கும் பயம், தெரிஞ்சிருக்குமோ என்ற வெட்கம், கண்டுபிடிச்சுட்டாங்களோ என கூனிக்குறுகும் அவமானம், கேட்டுட்டானே என தலைக்கேறும் கோபம், ஒத்துக்கவே மாட்டேங்கறானே என வரும் வெறுப்பு, சொன்னதை மாத்தி சொல்லறானே என மூக்கு நுனியில் எரிச்சல், அடக்கமாட்டாமல் வரும் அகப்பாவச் சிரிப்பு போன்ற அனைத்து தொந்தரவுகளை ஏற்கனவே பெற்றிருக்கும் எனக்கு தமிழினியின் சங்கிலிப் பதிவை படித்தவுடன், கானுழைத்துக்கொண்டே ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போலானேன்.

விரும்பிக்கேட்கும் பாடல்கள்.

ரோஜாவைத்தாலாட்டும் தென்றல்...
"வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்" என்ற வரிகளுக்காகவே..

மயிலிறகாய் மயிலிறகாய்... நிஜமாகவே நெஞ்சை வருடுகின்றது. ஒருவேளை எம்பெருமானின் மயிலிறகாய் இருக்குமோ?

வசிகரா என் நெஞ்சினிக்க..
இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்...

உயிர்/உடல் வாழிடங்கள்..

தாயின் கருவறை
அம்மா அப்பாவின் இதயங்கள்
பொதுகே
சென்னைப்பட்டினம்
(இருந்தது இரண்டே இடம்,
இப்படித்தான் சொல்லமுடியும்)

முன்மாதிரியாய் நான் எடுத்துக்கொள்பவர்கள்.

அன்னை தெரசா

முத்துலட்சுமி
அன்னை (ஆரோ)
ஜெயலலிதா - ஆனால் ஓட்டு யாருக்கு என்று சொல்லமாட்டேன்.

சான்றோர்

காமராசர்
அப்துல் கலாம்
அவ்வையார்
உ.வே.சா


என் நெஞ்சில் குடிகொண்டுள்ளோர்..


மயிலம் முருகன்
திருவகீந்தபுரம் தேவநாத சுவாமி
இவர்கள் இருவரும் எனது தாய் தந்தை மூலம் அறிமுகமானார்கள்.
இவர்களைஅடிக்கடி இல்லாவிட்டாலும் பூசம், உத்திரம் மற்றும் சித்திரை முழுநிலவுகளில் பார்த்துவிடவேண்டும்.என்னதான் தேவநாதன் குலதெய்வமானாலும், முருகனே என் உள்ளங்கவர் கள்வன்
திருவள்ளுவர்
பாரதி

இவர்களைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை.

கலையுலகில் பிடித்தவர்கள்.
இளையராஜா
நந்தா சூர்யா
ச்ரிதேவி - மூன்றாம் பிறையில் படம் முழுக்க நன்றாக நடித்த இவரை மிகப் பிடிக்கும்
விவேக் நகைச்சுவை

பிடித்த படங்கள்

மூன்றாம் பிறை
மகாநதி -முக்கியமாய் நாயகன் தன் பெண்ணை மீட்டெடுக்கும் காட்சி, மற்றும் அப்பெண்ணின் தூக்க உளரல் என்னை பாதித்தது. கொலைவெறி என்று சொல்லமுடியாது, பார்த்த ஓரிரு நாட்களுக்கு கைப்பையில் பேனாக்கத்தியை வைத்துக்கொண்டு அலைந்ததென்னவோ உண்மை.
முள்ளும் மலரும்
அழகி - என்னை பொருத்திப் பார்த்துக்கொன்டதால் எனக்கு பிடித்ததில் ஒன்றாயின.


பிடித்த செயல்கள்.

சமையல் - (உண்மைதானுங்க).. மற்றும் காலி செய்தல்..
கவிதை என்ற பெயரில் கிறுக்குவது (மற்றவரின் கருத்து தெரியாததால் அடக்கி வாசிக்கிறேன்.)
தமிழ்மணத்தில் புலம்புவது.
அண்ணனின் பைக்கில் சற்றே ஊர் சுற்றுவது.

டிவி பார்க்க நேரிடின் பார்க்கும் நிகழ்ச்சிகள்

Pogo
இந்தியா விளையாடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ( குளிக்காமல்?)
சன் மியூசிக்
எங்கள் வீட்டு டிவியின் 24ம் அலைவரிசை :)

பிடித்த உணவு..

இயற்கையின் படைப்பில் நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே என எந்த வேறுபாடும் பார்க்கமாட்டேனாக்கும்..
ஆனாலும்...

ஐஸ் பிரியாணி (அதானுங்க பழையது + சிறிது தயிருடன்..) + வறுத்த மோர் மிளகாய்
வத்தக் குழம்பு
கோழி65
மீன் எந்த விததிலும், முக்கியமாய் சங்கரா?


அடிக்கடி புரட்டும் புத்தகங்கள்

ஆங்கில அகராதி.
இட்லரின் சுயசரிதை - ஒண்ணுமே புரியமாட்டேங்குது.. ஆங்கில அகராதி கிழிந்தே விட்டது
பைபில்

பகவத் கீதை
கடையிரன்டும் ஆய்வு நோக்கில் தமிழில் படித்துக்கொன்டிருக்கிறேன்.
தமிழில் திருகுரான் கிடைக்குமா?

விரும்பும் நிகழ்வுகள்.

மயிலம் பயணம்.
முருகனின் மீதான ஒரு காதல் காவியம்..
கூர்க் சுற்றுலாப் பயணம்.
அண்ணனை மிரளவைக்கும் அளவிற்கு ECRல் பைக் பயணம்.


அடிக்கடி பார்க்கும் வலைத்தளங்கள் (தினமும் எல்லாம் முடியாதுங்க..)
ஜிமயில்
google தேடல்
தமிழ்மணம்
எனது பக்கம்

அழைக்க விரும்பும் நால்வர்
துளசி அவர்கள்
மதி அவர்கள்
உஷா அவர்கள்
"அவர்கள்" தான் போடனும், அப்புறம் என்னை யாராவது அக்கா என்று சொல்லிவிட்டால்..

மருள் நீக்கி -
தமிழ் பாடல்கள் எழுதும் இவருக்கு எனது வணக்கங்கள்.
நல்லவன் மருள்நீக்கி இருவரா ஒருவரா எனத் தெரியவில்ல.
வெகுசிக்கிரமே தினமலரில் பெயர் வந்துவிட்ட பெருமைக்குரியவர்.
(எனதெல்லாம் தினமலரில் போடும்படியாகவா இருக்கிறது..?)



இதோ என்னப் பற்றி சொல்லியாகிவிட்டது, இதெல்லாம் எனது உடனுறை மாமித் தோழிகள், உறவினர்கள் படிக்க நேரிடின் என்னாகுமோ, குட்டு வெளிப்பட்டுவிடுமோ, அடங்காப் பிடாரி என்ற அவச்சொல் ஏற்படுமோ, சமுகம் விட்டு ஒதுக்கி விடுவார்களோ? ஏதேனும் முகமூடி போட்டுக்கொண்டு ஆசிட் முட்டை வீசிவிடுவார்களோ என்ற பயம், மன நடுக்கம், கை கால் உதறல், என்னமாதிரியான பின்னூட்டக் கேள்விகள்/பதில்கள் வரும், அல்லது சென்ற பதிவிற்கு தமாஷ் பாண்டி மற்றும் குமரன் அவர்களின் வாக்கு வேண்டி வந்த பின்னூட்டங்களைத் தவிர ஒன்றுமே வராததால் ஏற்கனவே ஏற்பட்ட மனக்குழப்பம் போல் இப்போதும் ஏற்படுமோ? என்ற பயம் உள்ளது.

(பி.கு. எதையுமே நான் வரிசைப் படுத்தவில்லை, அதனால் வரிசை எண் போடவில்லை. அனைத்தும் ஒன்றே.)

உதறலுடன்,
பூங்குழலி

17 பின்னூட்டங்கள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

அழைப்புக்கு நன்றி பூங்குழலி. அக்கான்னுல்லாம் மிரட்ட மாட்டேன். நீங்க 'மதி'ன்னே கூப்பிடுங்க. அவர்களே, இவர்களேன்னு மிரட்டாதீங்க.

நேரம் பெரிய பிரச்சனை. முயற்சி செய்கிறேன். எப்பன்னு தெரியாது...

சுவாரசியமாக எழுதி இருக்கீங்க. :) நீங்க குறிப்பிட்டிருக்கும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதுவும் ஏதாவது செய்துகொண்டிருக்கும்போது தன்னிச்சையாக வாய் 'ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்' (இiந்த வரி மட்டுந்தான். :) ) சொல்லிட்டு/பாட்டிட்டு இருக்கும். சமயத்தில் பக்கதில் ஆள் இருப்பது தெரியாம எம் பாட்டுக்கு வெளுத்துவாங்கிட்டு இருப்பேன். :))

கூர்க் பயணம் - என் விருப்பங்களில் ஒன்று.
காப்பி விளம்பரம் ஒன்றில் பார்த்ததில் இருந்து ஆசை. ஒரு நாள்!..

-மதி


முத்துகுமரன் said...

//"வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்" என்ற வரிகளுக்காகவே//

பூங்குழலி, எனக்கும் இந்தப்பாடலில், குறிப்பாக இந்த வரி மிக மிக பிடிக்கும். நீங்களும் அதைக் குறிப்பிட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது. புத்திசாலிகளெல்லாம் ஒரே மாதிரி சிந்தனையுடன் இருப்பார்களோ:-) நண்பர்களின் மகிழ்விற்காக
(ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்றும் சொல்லலாம் இல்லையா:-))))))))))


பாலராஜன்கீதா said...

உங்களுக்கு அழகியில் பிடித்திருந்தது தனலக்ஷ்மியின் நடிப்பா? / வளர்மதியின் நடிப்பா? (வியாழன் அன்று DAN தொலைக்காட்சியில் அழகி திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது)


பூங்குழலி said...

அழைப்பை ஏற்றுக்கொண்டதிற்கு நன்றி...

மெதுவாகவே பதிவைப் போடுங்கள்.

எனக்குப்பிடித்த பாடலில் ஒன்று உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.
அந்தப் பாடலை குளியலறையில் அடிக்கடி பாடும் பழக்கம் உள்ளது.

கூர்க் பயணம் விரைவில் கைகூடி இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்.
நன்றி,
பூங்குழலி


பூங்குழலி said...

/பூங்குழலி, எனக்கும் இந்தப்பாடலில், குறிப்பாக இந்த வரி மிக மிக பிடிக்கும். நீங்களும் அதைக் குறிப்பிட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது//


மிக்க மகிழ்ச்சி முத்துக்குமரன்.

//புத்திசாலிகளெல்லாம் ஒரே மாதிரி சிந்தனையுடன் இருப்பார்களோ:-) //

முழுக்க முழுக்க உண்மை.
ஆனால், உங்களுக்கும் அந்த பாடல் பிடித்திருப்பதால் மேற்சொன்ன கூற்று, 99 சதவீதமாகிவிட்டது.

:)) சும்மா....



நான் தனித்துவமானவள் என நிருபிக்க பாடுபடுகிறேன்.
நீங்கள் நாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று சொல்லிவிட்டீர்களே...
ஓ நீங்களும் தனித்துவமானவரோ?

வருகைக்கு நன்றி,


பூங்குழலி said...

பாலா,

10ம் வகுப்பு, பள்ளிக்கூடம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள், அப்படியே என் வாழ்க்கைப்போல் இருந்ததால், நடிப்பை என்னால் கவனிக்க முடியவில்லை..

தனம் எனது மனம்.

வருகைக்கு நன்றி,
பூங்குழலி


- யெஸ்.பாலபாரதி said...

அட... அகப்பட்டதைக்கூட அழகாக சொல்லியிருக்கீங்களே... வழ்த்துக்கள்.
தோழன்
பாலா


குழலி / Kuzhali said...

//திருவகீந்தபுரம் தேவநாத சுவாமி
//
என்னங்க நீங்க நம்ம ஊரு(கடலூர்) பக்கமா?


Muthu said...

பூங்குழலி எல்லாம் நல்லா இருந்துச்சி..ஆனா இந்த ஈ.சி.ஆர் ரோட்டில் பைக் விஷயம்தான் பயமா இருக்கு....யார் டிரைவர்?:)))))

பதிவுக்கு நன்றி பூங்குழலி...

(மற்றபடி போன பதிவுக்கு சமுத்ரா பதில் சொல்லவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம்.அதற்கான பதில்கள் கூகிள் தேடுபொறியில் வரவில்லை என்று சொல்ல சொன்னார்:))))


ramachandranusha(உஷா) said...

பூங்குழலி உங்கள் அழைப்புக்கு நன்றி. ஆனால் இப்பொழுது தொடர முடியாத நிலைமை. சந்தோஷ விஷயம்தான். வேற என்ன? ஊருக்கு முட்டை கட்டிக் கொண்டு இருக்கிறேன். இது ஒரு அவசர பயணம்.

இப்பொழுது அதிக எழுதுவதில்லை போலிருக்கு?


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி தோழர் பாலா அவர்களே..

//அகப்பட்டதைக்கூட அழகாக சொல்லியிருக்கீங்களே... வழ்த்துக்கள்.
//

அகப்பட்டதிற்கு வாழ்த்துக்களா?

நன்றி,
பூங்குழலி


பூங்குழலி said...

வருகைக்கு நன்றி குழலி..


//என்னங்க நீங்க நம்ம ஊரு(கடலூர்) பக்கமா?
//
ஆமாம் பக்கந்தான்...
ஆனால் ஊர் இருந்தது புதுச்சேரியில்

ஊர் பெயரைச் சொன்னால், வாயாடி என்று கேட்டால் கையைப் பிடித்துக்கொண்டு என் வீட்டிற்கு அழைத்துவந்து காட்டிக்கொடுக்கும் அளவுக்கு நான் நல்ல பெயர் எடுத்திருப்பதால்,

ஊர் பெயர் .. மூச்...(நாவடக்கமாக்கும்...)

நன்றி,
பூங்குழலி


பூங்குழலி said...

//பூங்குழலி எல்லாம் நல்லா இருந்துச்சி..ஆனா இந்த ஈ.சி.ஆர் ரோட்டில் பைக் விஷயம்தான் பயமா இருக்கு....யார் டிரைவர்?:)))))//

வேறு யாரு?
நானே தான்.

என் அண்ணனை ஓட்டச் சொன்னால் பாதுகாப்பு என்ற பெயரில்,
மாட்டு வண்டியைவிட் சற்றே வேகமாக ஓட்டுவான்.

(என் அண்ணன் இதை பார்க்காதிருப்பானாக .... அப்புறம் பைக் கிடைக்காதில்லையா?)

//(மற்றபடி போன பதிவுக்கு சமுத்ரா பதில் சொல்லவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம்.அதற்கான பதில்கள் கூகிள் தேடுபொறியில் வரவில்லை என்று சொல்ல சொன்னார்:))))//

:)

ஒரு பதில் கொடுத்துள்ளார்...

அவரைப் பற்றி சிந்தித்தால், தவறான பக்கம் வாதாடும் ரொம்ப நல்லவர் போல் தெரிகிறது.
தான் திருந்திவிட்டேன், அதனால் எனது சமுகத்தை தூற்றாதே என்ற ஆதங்கம் அவரிடம் இருக்கிறது.

சீமான் வீட்டு கன்றுக்குட்டிகளுக்கு,
அல்லல்படும் மக்களின் உணர்வுகள் கேள்வி ஞானமாய் இருக்குமே தவிர,
அதை நேரிடையாய் உணர்ந்தாலன்றி அவற்றைப்பற்றிய சரியான புரிதல் இருக்காது.
அதை சொல்லும்போது என்னையும் உன்னைப்போல் கீழே இறங்கிவந்து அல்லல் பட சொல்கிறாயா?
என்று திரித்து, ஏழைகள் பணக்காரர்களை எல்லாம் ஒழித்துவிட நினைக்கிறார்கள் என்ற புரிதலாய் மாற்றிவிட முயல்கிறார்கள்.


பூங்குழலி said...

அழைப்பை ஏற்றுக்கொண்டதிற்கு நன்றி உஷா...

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்..

//இப்பொழுது அதிக எழுதுவதில்லை போலிருக்கு?//

அது பெரிய கதை...
ஐயோ , அதை நினைக்கும்போதே, மனம் விம்முகிறது..
அனைத்தும் நான் நினைத்தபடியே நல்லபடியாய் அமைந்தால், இங்கே நிகழ்வுகளை பங்கிட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
பூங்குழலி


Iyappan Krishnan said...

இருபது வயதில் இத்தனை திறமையா.. வாழ்த்துகள்.
உங்கள் பதிவுகள் படிக்க அருமையாக உள்ளது


என்னுடைய பதிவில் நீங்கள் எழுதிய குறள் வெண்பா மிக நன்றாக இருக்கிறது.

அன்புடன்
ஜீவா


Raghavan alias Saravanan M said...

பூங்குழலி,
உண்மை பகன்றால் தங்கள் பெயர் தான் என்னை இங்கு ஈர்த்தது. தூய தமிழ்ப் பெயர். பெயர் வைத்த பெருந்தகைகளுக்கு வாழ்த்துக்கள் (நிச்சயம் உங்கள் பெற்றோர்களாய்த் தானிருப்பார்கள்).

உங்கள் பேச்சிலும், எழுத்துக்களிலும் குறும்புத்தனம் மிளிர்கிறது!
வலைப்பூவினைப் படிக்கையில்
உள்ளம் குளிர்கிறது!

அப்படியே அக்மார்க் தங்கை நீங்கள்!!

வாழ்த்துக்கள் வளமாக வளர்வதற்கு!


பூங்குழலி said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி,
திரு Jeeves மற்றும் திரு இராகவன் அவர்களே..